Saturday, February 12, 2011

இம்மாத ஞானமொழி

மாதம்: பிப்ரவரி, 2011

"கற்றது கையளவு, கல்லாதது கடலளவு" என்பது ஔவையின் அருள்மொழி. எவ்வளவுதான் கல்வி கற்று பட்டம் பெற்றிருந்தாலும், ஞானக்கல்வியே முழுமைக் கல்வி. இக்கல்வியே மனிதனாக வாழ வழிக்காட்டுகிறது.

குருவை வணங்கும் கல்வியைக் கற்றுக்கொள்; குணமுள்ள மனிதனாக திகழ்வாய். தர்ம கல்வியைக் கற்றுக்கொள்; உள்ளத்தில் அன்பு பெருகி தர்ம சிந்தனை உடையவனாக போற்றப்படுவாய். அன்பு கல்வியைக் கற்றுக்கொள்; எல்லோருடைய மனதிலும் நீ வாழ்வாய். ஒழுக்கக் கல்வியை கற்றுக்கொள்; வானோர்க்கு நிகராக புகழப்படுவாய்.

சத்தியக் கல்வியை கற்றுக்கொள்; நீதி தவறாத மனிதனாக பூலோகத்தில் உலா வருவாய். அடக்கக் கல்வியைக் கற்றுக்கொள்; அமைதி நிறைந்தவனைக் காண்பாய். புண்ணியக் கல்வியைக் கற்றுக்கொள்; புனிதனாக இறையருள் பெற்றுக் காணப்படுவாய்.

மேற்கண்ட கல்விகள் யாவும் நமக்காக மகான்கள் விட்டுச் சென்ற அரிய பொக்கிஷங்கள் ஆகும். ஆக இத்தகைய கல்வியை ஒவ்வொரு மாந்தரும் தவறாது கற்று, பிறவி துன்பத்திலிருந்து விடை பெறுவோம். ஞானக் கல்வியின் மகத்துவத்தை உணர்ந்து நாம் எல்லோரும் செயல் படுவோம்.

"எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன், கற்று விட்டேன் என்று ஏமாந்து விடாதே! நீ படிக்க வேண்டியதும், கற்க வேண்டியதும் இன்னும் கடல் போல் இருக்கின்றது என்பதை மறந்து விடாதே மனமே!".

No comments:

Post a Comment