இத்தகைய உயர்ந்த மார்க்கங்களைச் சொன்ன சித்தர் அகத்தியர் புராணங்களில் மற்றும் செவிவிழி கதைகளில் வர்ணிக்கப்படும்போது அவர் உருவம் நகைப்பிற்குரியதாய் உள்ளது. அகத்தியர் கட்டைவிரல் உயரம் உள்ளவர்; முழங்கால் உயரம் உள்ளவர் என்றும் தொப்பை வயிறாகவும் பருத்த உடம்பாகவும் குள்ளமான தோற்றம் உடையவர் என்றும் சித்தரிக்கப்படுகிறார். புராணங்களிலும் சினிமாவிலும் இப்படிக்காட்டப்படுவதால் இதை உண்மையென்றே மக்களும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். சித்தர்கள் காலம் கடந்தவர்கள்; வயது நிர்ணயிக்க முடியாதவர்கள்.
"கற்பமுறை கொண்டல்லோ யுகாந்த காலம்
காசினியில் இருப்பவனே சித்தனாமே"
அகத்தியர் பெருநூல் காவியம் (21000-இல்) "கற்பங்கள் சாப்பிட்டு யுகாந்த காலம் உலகில் என்றும் அழியாது இருப்பவனே சித்தன்" என்று கூறுகிறார். தூலமான உடல் கொண்டவர் சித்தராகார். அதாவது உடல் பெருத்தவர்கள் சித்தராக மாட்டார்கள். கற்ப சாதனைகளால் உடலை சித்தி செய்து மரணமில்லாமல் பல யுகங்கள் வாழ்பவரே சித்தர்.
"வாழ்கிறோம் சித்தரோடு ரிஷிகளெல்லாம்
மகத்தான கற்பூரதீபம் போலே
வாழ்கிறோம் காயத்தை ஒளிபோலாக்கி
அப்பனே கருவிடையம் சொல்லக்கேளு"
"சித்தர்கள், ரிஷிகள் எல்லாம் காயத்தை (உடம்பை) கற்பூரதீபம் போன்று ஒளி உடம்பாக்கி வாழ்கிறோம்"என்று அருள்மிகு கொங்கணவர் தன் கடைக்காண்டம் 500-இல் சொல்கிறார்.
"தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே
தேஜொளிவின் மயங்கொண்ட கும்ப யோனி
பானான பராபரத்துக்கு ஒப்பிதனை
பாருலகில் அகத்தியரை பகருவேனே"
- போகர் 7000
"அகத்தியரின் தேக ஒளி விண்நிறைந்த ஒளிப் பிழம்புக்கு நிகரானது" என்று போகர் கூறுகிறார். அகத்தியரின் சொரூபம் தேஜசுடன் கூடிய ஒளி நிறைந்தது என்று சொல்கிறார்.
"காயமதை அழியாமற் செய்வதற்குக்
கருத்தான சிவபோகங்கண்டு தேறு
மாயமுள்ள வாழ்வுதனை மறந்துப்போடு
மைந்தனே ஞானமதின் வழியில் நில்லே"
- அ.மி. சுகப்பிரம்ம ரிஷி
"காயத்தை அழியாமல் செய்வதற்குச் சிவயோகம் பயில வேண்டும்; அதற்கு ஞானவழியில் செல்ல வேண்டும்" என்று அருள்மிக சுகபிரம்மர் கூறுகிறார். சித்தரென்றால் காயத்தைச் சித்திபண்ணி ஒளி உடம்பாக்கி வெளியில் கலப்பர் என்பதாம்.
"ஏறாதுவாசி வலுவில்லாக் காயம்
என்னசெய்யு மண்பாண்டம் ஏதுக்காகும்
தேறாது உடல் வழுத்துப் பிராணம் குன்றில்
தெய்வஒளி காணரிது தேசட்தோர்க்கு"
- அ.மி. காசுபுசுண்டர்